மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட சம்பவம்: குற்றப்பத்திரிகை தாக்கல்!

நாட்டையே உலுக்கிய மணிப்பூரின் 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பல அதிர்ச்சித் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

மணிப்பூரில் குக்கி மற்றும் மைத்தேயி இனப் பழங்குடிகளிடையே கடந்த ஆண்டு மிகப் பெரும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்கள் தற்போது வரை ஓயவில்லை. இந்த வன்முறையின் உச்சமாக இரு குக்கி இனப் பழங்குடிப் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டது ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கி எடுத்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. மணிப்பூர் சூரசந்த்பூர் மாவடத்தில் குக்கி- ஜோமி பழங்குடி இனத்தைச் சேர்ந்த அந்த இரண்டு பெண்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் நிர்வாணமாக தெருக்களில் இழுத்து வரப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

குக்கி இனப் பழங்குடி பெண்களை முதலில் வன்முறை கும்பல் தாக்கி பலாத்காரம் செய்தது. இதனையடுத்து இரு பெண்களையும் நிர்வாணப்படுத்திய கும்பல் சாலையோரத்தில் இருந்த போலீஸ் வாகனத்தை தங்களது வசமாக்கி அவர்களையும் ஏற்றி இருக்கிறது. ஆனால் போலீஸ் வாகனத்தின் ஓட்டுநரோ சாவியை தர மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த வன்முறை கும்பலைச் சேர்ந்த இரு குண்டர்கள், போலீஸ் வாகனத்தில் இருந்து இரு பெண்களையும் கீழே இழுத்து தள்ளிவிட்டுள்ளனர். அங்கிருந்த போலீசார் முன்னிலையில் இத்தகைய கொடூரமும் நிகழ்ந்திருக்கிறது. இதன் பின்னரே பெண்களை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்றுள்ளது அந்த வன்முறை கும்பல். அப்போது மொத்தம் 7 போலீசார் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு உதவுங்கள் என்று கெஞ்சி இருக்கின்றனர். ஆனாலும் போலீசார் மவுனமாகவே கை கட்டி வேடிக்கைப் பார்த்துள்ளனர். இவ்வாறு போலீஸ் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவாலயங்கள்- வீடுகள் எப்படியெல்லாம் கிராமங்களில் எரிக்கப்பட்டன என்பது குறித்தும் சிபிஐ குற்றப்பத்திரிகையில் விவரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில டிஜிபி ராஜீவ் சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் போலீசார் மீது துறை சார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குற்றவியல் நடவடிக்கைகள் குறித்து சிபிஐ அதிகாரிகள்தான் முடிவெடுப்பர் என்றார். மணிப்பூர் அரசு மற்றும் மத்திய அரசின் அறிவுறுத்தல்களின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தி இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இந்தக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றவாளிகள் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.