பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?: ராகுல்!

“பிரதமர் மோடியின் அரசியல் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதமா?” என பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடகாவின் ஹாசன் எம்பியான பிரஜ்வல் ரேவண்ணாவின் சர்ச்சை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பேசுபொருளாக மாறியது. இந்த விவகாரம் தற்போது அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இந்நிலையில், இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

கர்நாடகாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூரமான குற்றங்கள் குறித்து நரேந்திர மோடி பேசாமல் எப்போதும் போல் மவுனம் காத்து வருகிறார். அவர் இது குறித்து பிரதமர் பதில் சொல்ல வேண்டும். நூற்றுக்கணக்கான பெண்களுக்கு அநீதி இழைத்த ஒரு நபருக்காக, பிரதமர் மோடி ஏன் பிரச்சாரம் மேற்கொண்டார். இவ்வளவு பெரிய குற்றவாளி எப்படி எளிதாக நாட்டை விட்டு தப்பினார். குற்றவாளிகளுக்கு பிரதமர் மோடி மவுனமாக ஆதரவளிப்பது நாடு முழுவதும் உள்ள குற்றவாளிகளுக்கு தைரியமூட்டுகிறது. பிரதமர் மோடியின் அரசியல் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதமா?. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.