சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி ஜூன் 4 வரை டிரோன்கள் பறக்க தடை!

சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஜூன் 4-ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக காவல் துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

ஏப்.19 அன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) சென்னையில் உள்ள லயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம், ராணி மேரி கல்லூரி, மயிலாப்பூர் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி ஆகிய இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின் பேரில் 1973-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144ன் கீழ், சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் (Other Unnamed Aerial Vehicles) பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் (EVMs) வைக்கப்பட்டுள்ள மேற்கூறிய இடங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் சிகப்பு மண்டலமாக (Red Zone) அறிவிக்கப்பட்டு ஜூன் 4 வரை டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் (Other Unnamed Aerial Vehicles) பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும், பாதுகாப்பு காரணமாக தற்காலிக தடை விதிக்கப்பட்ட டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.