சவுக்கு சங்கர் வந்த போலீஸ் வாகனத்தை செருப்புடன் மறித்த பெண்கள்!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று தேனியில் கைது செய்யப்பட்டார். பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசிய நிலையில் கோவை சைபர் க்ரைம் போலீசார் அவரை கைது செய்தனர். இன்று மாலையில் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த போலீசார் சவுக்கு சங்கரை அழைத்து சென்ற வாகனத்தை பெண்கள் மறித்ததோடு கையில் செருப்பு வைத்து அவருக்கு எதிராக கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரபல யூடியூபராக இருப்பவர் சவுக்கு சங்கர். இவர் லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வந்தார். கடந்த 2008ல் டெலிபோன் உரையாடல் கசிந்தது தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் சஸ்பெண்ட் ஆனார். இந்நிலையில் தான் யூடியூப் சேனல்களுக்கு சவுக்கு சங்கர் பேட்டியளித்து வந்தார். தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். அதன்பிறகு அவர் தனியாக யூடியூப் சேனல் ஆரம்பித்தார். அதில் தொடர்ந்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார். இந்த சேனலிலும் தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்நிலையில் தான் காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் பற்றி அவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இததொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தான் இன்று காலையில் தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சவுக்கு சங்கர் மீது இந்திய தண்டனை சட்டம் 293 (பி), 509 மற்றும் 353 ஐபிசி ஆர்/டபிள்யூ பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு பிரிவு 67 உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்டவை தான் அந்த பிரிவுகளாகும்.

அதன்பிறகு அவரை போலீஸ் வாகனத்தில் கோவைக்கு அழைத்து சென்றனர். இந்த வேளையில் பாதி வழியில் அவர் சென்ற போலீஸ் வாகனம் விபத்தை சந்தித்தது. இதில் சவுக்கு சங்கர் மற்றும் போலீசார் காயமடைந்தனர். இந்த காயத்துக்கு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டனர். அதன்பிறகு இன்று மாலையில் சவுக்கு சங்கர் போலீஸ் வாகனத்தில் கோவை நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்த வேளையில் கோவை நீதிமன்றம் செல்லும் வழியில் பெண்கள் குவிந்து இருந்தனர். சவுக்கு சங்கரை அழைத்த சென்ற போலீஸ் வாகனத்தை அவர்கள் மறித்து செருப்பை கையில் ஏந்தி அவருக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் அந்த பெண்கள் வாகனத்துக்குள் இருந்த சவுக்கு சங்கரை நெருங்க முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சவுக்கு சங்கரை பாதுகாப்பாக நீதிமன்றத்துக்குள் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.