உண்மைக்கு அரிச்சந்திரன் என்றால் பொய்க்கு நரேந்திர மோடி: மனோ தங்கராஜ்!

உண்மைக்கு அரிச்சந்திரன் என்றால் பொய்க்கு நரேந்திர மோடி என்று பிரதமர் மோடியை விமர்சித்து இருக்கிறார் தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் .

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19 துவங்கியது. 2வது கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 26 நடைபெற்று முடிந்தது. அடுத்ததாக, இன்று மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக, அவர் கொடுக்கும் வாக்குறுதிகள், இந்தியாவிற்காக அவர் செய்ததாக அவரே சொல்லும் விஷயங்களை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அதிலும், தமிழ்நாட்டில் பிரதமர் மோடியின் பேச்சுவதை ‘வடை சுடுகிறார்’ என பங்கமாக பேசி வருகிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்களும் ‘மோடியின் வடை’ என்றெல்லாம் பேசி வருகிறார்கள். அந்த வகையில், பிரதமர் மோடி இந்த தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லிய பொய்களை அடுக்கி வைத்து இருக்கிறார் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்.

இது குறித்து அவர் பதிவிட்ட பதிவில், “உண்மைக்கு அரிச்சந்திரன் என்றால் பொய்க்கு நரேந்திர மோடி! நரேந்திர மோடி அவர்களின் தேர்தல் பிரச்சாரப் #பொய்கள்:

பொய் 1. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக்கின் தேர்தல் அறிக்கை போல் இருக்கிறது.

பொய் 2. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கழுத்தில் இருக்கும் தாலி கூட மிஞ்சாது, உங்கள் சொத்துக்களையும், பொருட்கள் அனைத்தையும் இஸ்லாமியர்களுக்கு பங்கு போட்டு கொடுத்து விடுவார்கள்.

பொய் 3. உங்களிடம் 2 எருமை மாடுகள் இருந்தால், காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்பட்சத்தில் ஒரு மாட்டை உங்களிடம் இருந்து பறித்துவிடுவார்கள்.

பொய் 4. காங்கிரஸ் இங்கு இறந்துகொண்டு இருப்பதால், பாகிஸ்தான் அழுது கொண்டு இருக்கிறது. காங்கிரசின் இளவரசர், இந்தியாவின் பிரதமராக வேண்டும் என பாகிஸ்தான் விரும்புகிறது.

பொய் 5. அரசாங்கத்தின் டெண்டர் நடைமுறைகளில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு என காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ளதாக பொய் தகவலை பரப்பியுள்ளார் மோடி.

பொய் 6. ராமர் கோயில் நிகழ்வை புறக்கணித்தவர்கள் தான் I.N.D.I.A கூட்டணியில் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

பொய் 7. இந்திய அரசியலமைப்பை மாற்றி OBC, SC,ST மக்களின் இட ஒதுக்கீட்டை பறித்து ஜிகாதி வாக்கு வங்கியிடம் தர காங்கிரஸ் முயல்கிறது.

பொய் 8. எனக்கு சொந்தமாக வீடு சைக்கிள் கூட இல்லை என்றார் மோடி. ஆனால் 2019 மக்களவைத் தேர்தல் வேட்புமனுவில் குஜராத் காந்திநகரில் ₹1.10 கோடி மதிப்பில் சொந்த வீடு இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பொய் 9. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பரம்பரை வரியின் கீழ், 55 சதவீத மக்களின் பரம்பரை சொத்து பறிமுதல் செய்யப்பட்டு, மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

பொய் 10. நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சொன்னதாக பொய்யான தகவலை கூறியுள்ளார் மோடி” என பதிவிட்டு இருக்கிறார் மனோ தங்கராஜ்.