தலைசிறந்த மூன்றாண்டு; தலைநிமிர்ந்த தமிழ்நாடு: மு.க.ஸ்டாலின்!

நாடும், மாநிலமும் பயனுற எந்நாளும் உழைப்பேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:-

வணக்கம்,

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் உங்களின் நல் ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று தமிழ்நாட்டிற்கு முதல்-அமைச்சராக பொறுப்பேற்று இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவு பெற்று 4 ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த 3 ஆண்டு காலத்தில் நான் செய்து கொடுத்த சாதனைகள், திட்டங்கள், சாதனைகள் என்னென்ன என்று தினந்தோறும் பயனடைந்த மக்களின் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே சாட்சி.

திராவிட மாடல் அரசு செய்துகொடுத்த திட்டங்களை நான் சொல்வதைவிட பயனடைந்த மக்கள் சொல்வதுதான் உண்மையான சாட்சி. ஸ்டாலின் என்றால் உழைப்பு… உழைப்பு… உழைப்பு என்று சொன்னாரு; அப்படி எங்களை எல்லாம் ஆளாக்கிய அன்பு தலைவர் கலைஞர். இந்த 3 ஆண்டு காலத்தில் ஸ்டாலின் என்றால் செயல்… செயல்… செயல்… என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறேன்.

எப்போதும் நான் சொல்வது இது என்னுடைய அரசு அல்ல; நமது அரசு. அந்தவகையில் நமது அரசு 4-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாடும், மாநிலமும் பயனுற எந்நாளும் நான் உழைப்பேன் என்று உறுதியேற்று, ஆட்சி பயணத்தை உங்கள் வாழ்த்துகளுடன் தொடர்வேன்.

இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி. மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது. நம்பிக்கையோடு முன்செல்கிறேன்.. பெருமையோடு சொல்கிறேன்.. தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு. இவ்வாறு வீடியோவில் பேசியுள்ளார்.