சேலம் சைபர் கிரைம் போலீஸ் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!

காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைம் பெண் போலீஸ் அளித்த புகாரின் அடிப்படையில், சேலம் சைபர் கிரைம் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

யூடியூபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார். இந்த வீடியோ காட்சிகளைப் பார்த்த கோவை சைபர் கிரைம் போலீஸார் சவுக்கு சங்கர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கில் வழக்கு பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மே 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சேலம் சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் கீதா, சேலம் மாநகர சைபர் கிரைம் பிரிவில், யூடியூபர் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், சவுக்கு சங்கர் மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவுபடுத்துதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின்படி, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.