கென்யாவில் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வெளியுறவுத் துறை வலியுறுத்தல்!

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் வன்முறையால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது.

கென்யா பாராளுமன்றம் குடிமக்களுக்கான வரிகளை அதிகப்படுத்தும் சர்ச்சைக்குரிய மசோதாவை நிறைவேற்றியதைத் தொடர்ந்து கென்யாவின் தலைநகரான நைரோபி மற்றும் பல நகரங்களில் வன்முறை தாக்குதல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

”தற்போது கென்யாவில் நிலவும் பதட்டமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அங்கு வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்துகிறோம். போராட்டங்கள் நடக்கும் பகுதிகளில் அநாவசியமாக வெளியே செல்வதைத் தவிர்த்து நிலைமை சீராகும் வரை பாதுகாப்பாக இருக்குமாறுக் கேட்டுக் கொள்கிறோம்” என்று இந்திய வெளியுறவுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தற்போது 20,000 இந்தியர்கள் வரை கென்யாவில் வசிப்பதாக அதிகாரப்பூர்வத் தக்வல்கள் தெரிவிக்கின்றன.