பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக வடசென்னை காவல் கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் மேற்பார்வையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி பொன்னை பாலு, அதே பகுதி சந்தோஷ், பெரம்பூர் பொன்னுசாமி நகர், 3-வது தெரு திருமலை, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை மணிவண்ணன், குன்றத்தூர் திருவேங்கடம், திருநின்றவூர் ராமு என்ற வினோத், அதே பகுதியைச் சேர்ந்த அருள், செல்வராஜ், விஜய், கோகுல், சிவசக்தி ஆகிய 11 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்களை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தவும், இறுதி நிகழ்வில் பங்கேற்கவும் உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவருமான மாயாவதி தனி விமானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை வருகிறார். இதுதொடர்பாக மாயாவதி தனது எக்ஸ் வலைதளப்பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகதலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைகண்டிக்கத்தக்கது. குற்றவாளிகளை தமிழக அரசு தண்டனை பெற்றுத்தர வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டதுடன் அஞ்சலி செலுத்த சென்னைக்கு வருவதையும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
