கணவரை இன்ஸ்டாகிராமில் விவாகரத்து செய்த துபாய் இளவரசி ஷைகா மஹ்ரா!

துபாய் இளவரசி ஷைகா மஹ்ரா தனது கணவரை இன்ஸ்டாகிராம்வழி விவாகரத்து செய்துள்ளார்.

துபாயை ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆட்சி செய்து வருகிறார். இவரது மகள் ஷைகா மஹ்ரா பின்ட் முகமது பின் ரஷீத் அல் மக்தூமுக்கு கடந்தாண்டு மே மாதத்தில்தான் ஷேக் மனா பின் முகமது பின் ரஷீத் பின் மனா அல் மக்தூமுடன் திருமணம் நடந்து, இந்தாண்டு மே மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

இந்த நிலையில், இளவரசி ஷைகா மஹ்ரா, அவருடைய கணவரிடம் விவாகரத்து பெறுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார். ஷைகா மஹ்ரா இன்ஸ்டாகிராம் பதிவில், `அன்புள்ள கணவரே, நீங்கள் பிற துணைகளுடனே எப்போதும் சேர்ந்திருப்பதால், நான் இதன் மூலம் நம் விவாகரத்தை அறிவிக்கிறேன். உங்களை விவாகரத்து செய்கிறேன், உங்களை விவாகரத்து செய்கிறேன், மேலும் உங்களை விவாகரத்து செய்கிறேன். உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். _ உங்கள் முன்னாள் மனைவி” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், ஷைகா மஹ்ரா மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில், இருவரும் ஒன்றாக இருக்கும் படங்களையும் நீக்கியுள்ளனர். அவர்கள் இருவரின் இன்ஸ்டாகிராம் பக்கங்களையும் ஒருவரையொருவர் முடக்கியுள்ளனர்.

கணவரை இன்ஸ்டாகிராம்வழி விவாகரத்து செய்த ஷைகா மஹ்ராவுக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் மஹ்ராவின் விவாகரத்து பதிவைக் குறிப்பிட்டு இது வெளிப்படையான, துணிவான முடிவு என பாராட்டி வருகின்றனர்.

‘அழகுடன் தங்களைப் போன்ற துணிவான பெண்ணுடன் வாழ்க்கையை பகிர்ந்துகொள்ளும் ஆண் மிகவும் பாக்கியசாலி’ என சிலர் அவரின் மறுமணம் குறித்தும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.