அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறிகளைக் காட்டுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வெள்ளை மாளிகை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் (ஜோ பைடன்) டெலாவேருக்குத் திரும்புவார், அங்கு அவர் சுயமாக தனிமைப்படுத்தப்படுவார். அந்த நேரத்தில் தனது அனைத்து கடமைகளையும் முழுமையாகச் செய்வார்” என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிபர் ஜோபைடன் தனது எக்ஸ் வலைதளத்தில், “இன்று மதியம் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது, நான் தற்போது நன்றாக இருப்பதாக உணர்கிறேன், அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி. நான் குணமடைவதற்காக தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளேன். அந்த நேரத்தில் அமெரிக்க மக்களுக்கான பணியை தொடர்ந்து செய்வேன்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.

81 வயதான பைடன், லாஸ் வேகாசில் நடந்த என்.ஏ.ஏ.சி.பி. தேசிய மாநாட்டில் கலந்து கொண்டநிலையில், நேற்று அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. முன்னதாக அந்த மாநாட்டில் பேசிய அவர் டொனால்டு டிரம்பின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார். மேலும் நாட்டில் துப்பாக்கி வன்முறை அதிகரிப்பதை கடுமையாக கண்டித்தார்.