நேபாளத்தில் பேருந்துகள் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் சடலமாக மீட்பு!

நேபாளத்தில் பேருந்துகள் கவிழ்ந்த விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட 19 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேபாளத்தில் பருவமழை தொடங்கி இருப்பதால் கனமழை பெய்து வருகிறது. இதனால், சித்வான் மாவட்டம் சிமல்தல் பகுதியில் நாராயண்காட்-மக்லிங் சாலையில் கடந்த 12-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக சென்ற 2 பேருந்துகள் நிலச்சரிவில் சிக்கி அருகில் உள்ள திரிசூலி ஆற்றுக்குள் கவிழ்ந்தன. இதில் ஒரு பேருந்து பிர்குஞ்ச் நகரிலிருந்து காத்மாண்டுக்கு சென்று கொண்டிருந்தது. இதில் 7 இந்தியர்கள் உட்பட 24 பேர் பயணம் செய்தனர். மற்றொரு பேருந்து 30 பயணிகளுடன் காத்மாண்டுவிலிருந்து கவுர் நகருக்கு சென்று கொண்டிருந்தது. இந்த இரு பேருந்துகளிலும் மொத்தம் 54 பேர் பயணித்த நிலையில் 3 பேர் நீந்தி கரை சேர்ந்தனர்.

இந்த இரு பேருந்துகளும் ஆற்றில் கவிழ்ந்ததையடுத்து, மீட்புக் குழுவினர் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 4 இந்தியர்கள் உட்பட 19 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.