தெற்கு லெபனானை விட்டு மக்கள் உடனடியாக வெளியேறவும்: இஸ்ரேல் எச்சரிக்கை!

தெற்கு லெபனானில் உள்ள இரண்டு கிராமங்களில் உள்ள மக்கள் தங்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக வீடுகளைவிட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் மீண்டும் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஹிஸ்புல்லாக்களின் நடவடிக்கை, இஸ்ரேல் ராணுவத்தை அதற்கு எதிராக செயல்படத் தூண்டியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் உங்களை (கிராமத்தினரை) துன்புறுத்த விரும்பவில்லை. உங்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக உங்கள் வீடுகளை விட்டு நீங்கள் உடனடியாக வெளியேற வேண்டும். ஹிஸ்புல்லாக்களின் நடமாட்டம், அவர்களின் இடங்கள், ஆயுதக் கிடங்குகளுக்கு அருகில் இருப்பவர்கள் தங்களின் உயிரை பணையம் வைக்கிறார்கள் என்று பொருள்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இஸ்ரேல் கொடுக்கும் பதிலடி கடுமையானதாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் யார் லாபிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் குறிப்பிடத்தகுந்த கடுமையான விலையைக் கொடுத்தே ஆகவேண்டும். இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என்பது ஈரானுக்குத் தெரியும். அந்த பதிலடி மிகவும் கடுமையானதாகவும், சிரியா, ஈராக், ஏமன், லெபனான், காசா மற்றும் ஈரானுக்கு தெளிவான ஒரு செய்தியைத் தெரிவிப்பதாகவும் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

பாலஸ்தீனத்தின் காசா, லெபனான் மீதான தாக்குதல்கள், ஹிஸ்புல்லா தலைவர்கள் படுகொலை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை நோக்கி ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

ஈரானின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஈரான் மிகப் பெரிய தவறை செய்துவிட்டது. இதற்கான விலையை அந்த நாடு கொடுக்கும். முன்னதாக யாஃபா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிலும் தெஹ்ரானின் (ஈரான் தலைநகர்) தலையீடு இருக்கிறது. நம்மை தற்காத்துக் கொள்ளும் நம்முடைய உறுதியை ஈரான் புரிந்து கொள்ளவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலுக்கு பின்பு இந்த விஷயத்தில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இதுகுறித்து ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறுகையில், “இந்த விவகாரத்தில் இருந்து விலகி இருக்குமாறும், இதில் தலையிட வேண்டாம் என்று அமெரிக்காவை நாங்கள் எச்சரித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். ஸ்வீடன் நாட்டு தூதரகம் மூலமாக இந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது, இஸ்ரேலை நோக்கி வரும் ஏவுகணைகளை வழியிலேயே தடுத்து வீழ்த்துமாறு அமெரிக்க ராணுவத்துக்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டிருந்தார். மேலும், இதற்கான பதிலடி எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இஸ்ரேல் பிரதமருடன் ஆலோசிக்க இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் முழு ஆதரவு இஸ்ரேலுக்கு உண்டு என்றும் பைடன் தெரிவித்திருந்தார்.