உடுப்பியில் ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுத அனுமதி மறுப்பு, வெளியேறிய மாணவிகள்!

உடுப்பியில் உள்ள வித்யோதயா பியு கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த இரண்டு மாணவிகள் பரீட்சை எழுத அனுமதி மறுப்பு, தேர்வு மையத்தை விட்டு வெளியேறிய மாணவிகள்.

கர்நாடகா மாநில உயர்நீதிமன்ற உத்தரவுப்படி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வின் போது அம்மாநில முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதித்து பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இதேபோல் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதித்து மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் பி.யூ.சி. 2-வது ஆண்டுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. ஹிஜாப் அணிந்து வர அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள அலியா அசாதி மற்றும் ரேஷாம் ஆகியோர் உடுப்பியில் உள்ள வித்யோதயா பியு கல்லூரிக்கு தேர்வு எழுத வந்துள்ளனர். ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு அவர்கள் தேர்வு மையத்திற்குள் நுழைய முயன்றபோது ஹிஜாப் அணிந்திருந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மற்றும் கல்லூரி முதல்வரிடம் தங்களை அனுமதிக்கும் படி 45 நிமிடங்கள் வலியுறுத்தினர். ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் மாநில அரசின் தடை உத்தரவு காரணமாக தேர்வு மையத்திற்குள் அவர்களை அனுமதிப்பதில் விலக்கு அளிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்வு எழுதாமல் அவர்கள் மையத்தை விட்டு வெளியேறினர்.