காங்கிரஸின் தேர்தல் அறிக்கையால் பாஜக மீது மக்கள் ஆர்வம்: அமித் ஷா

‘காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சிறுபான்மையினருக்கான சமரச அரசியலைக் கையில் எடுத்துள்ளதால், அது வெளியாகியதில் இருந்தே மக்களின் கவனம் பாஜக மீது இன்னும் அதிகமாகக் குவிந்துள்ளது’ என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆங்கில ஊடகத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டியில் பேசியிருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியானதில் இருந்து மக்கள் பாஜகவின் பக்கம் திரும்புவது மேலும் அதிகரித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனது பழைய சித்தாந்தமான ‘சிறுபான்மையினரை சமாதானப்படுத்தும்’ அரசியலை அதன் தேர்தல் அறிக்கையிலும் தொடர்ந்துள்ளது. அதனால், இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சூழலில், நாட்டின் வளம் மற்றும் பாதுகாப்புக்காகவும் ஏழைகளின் நலனுக்காவும் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சிக்கு வாக்களிக்குமாறு நான் மக்களிடம் வேண்டிக்கொள்கிறேன்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தனிப்பட்ட சட்டங்களை முன்னெடுப்பது பற்றி பேசுகிறது. இந்த நாடு இனி இஸ்லாமியர்களின் ஷரியா சட்டத்தின்படி செயல்பட வேண்டுமா? என்று நான் ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புகிறேன். நமது அரசியலமைப்பு மதச்சார்பற்றது. இந்த நாட்டின் சட்டங்கள் மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை.

நாங்கள் முத்தலாக் சட்டத்தை ரத்து செய்துவிட்டு பொது சிவில் சட்டத்தினை தொடங்கினோம் அதனை முன்னெடுத்தும் செல்வோம். ஆனால், ராகுல் காந்தி தனிப்பட்ட சட்டங்களைப் பற்றி பேசுகிறார். அது நாட்டை பிளவுபடுத்திவிடும். இந்த நாட்டில் தனிப்பட்ட சட்டங்களை ஒருபோதும் அமல்படுத்த முடியாது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமர் ஆவதை நாம் பார்க்கப்போகிறோம் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.