ரஷிய போர்க்கப்பலை அழித்துவிட்டோம்: உக்ரைன் அறிவிப்பு!

கருங்கடலில் உள்ள ரஷிய போர்க்கப்பலை அழித்துவிட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. கருங்கடலைக் காக்கும் நெப்டியூன் ஏவுகணைகள் ரஷியக் கப்பலுக்கு மிகக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று உக்ரைன் கவர்னர் மக்சிம் மார்சசென்கோ தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா 50-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகரங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன.

இந்நிலையில், கருங்கடலில் உள்ள ரஷிய போர்க்கப்பலை அழித்துவிட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. இதுகுறித்து கவர்னர் மக்சிம் மார்சசென்கோ கூறியதாவது:-

கருங்கடலைக் காக்கும் நெப்டியூன் ஏவுகணைகள் ரஷிய போர்க் கப்பலுக்கு மிகக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. இது உக்ரைனின் மகிமை. அந்த கப்பல் தற்போது பயங்கரமாக எரிகிறது. 510 குழு உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், அவர்களால் உதவி பெற முடியுமா என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷிய ராணுவம் உறுதி செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.

ரஷிய போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா ஏற்கனவே வழங்கியுள்ளது. ரஷியா – உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுறம் சமாதான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்கள், வெடிபொருட்கள், ராக்கெட்டுகள், மருந்துப் பொருட்கள் உள்பட பல்வேறு ராணுவ ஆயுதங்களை அமெரிக்கா வழங்குகிறது.