காங்கிரஸ் கட்சியில் பிரஷாந்த் கிஷோர் இணையவுள்ளதாக தகவல்

காங்கிரஸ் கட்சியில் பிரபல தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

காங்கிரஸ் தொடர் தோல்விகளால் தத்தளித்து வரும் நிலையில், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்கான முயற்சிகளில் இப்போதே அக்கட்சி இறங்கி விட்டது. அக்கட்சியின் தலைவர் சோனியா தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், கலந்து கொண்ட தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர், தனது விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் சேரும் தனது விருப்பத்தையும் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அவர் முன்வைத்த திட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைக்கும் குழு கவனித்து இறுதி முடிவை ஒரு வாரத்தில் கட்சி தலைவரிடம் அறிக்கை சமர்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் இணைவது என்பது உள்ளிட்ட பிரஷாந்த் கிஷோரின் ஆலோசனைகள் குறித்து இன்னும் ஒரு வாரத்தில் முடிவு தெரியவரும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். மேலும், நிரூபிக்கப்பட்ட நற்சான்றிதழ்கள் கொண்ட பிராண்ட் என பிரசாந்த் கிஷோரை வர்ணித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் தாரிக் அன்வர், எந்தவித முன்நிபந்தனையும் இல்லாமல் அவர் கட்சியில் சேரத் தயாராக இருப்பதாகவும், அவரது வரவு கட்சிக்கு நிச்சயமாக உதவும் என்றும் கூறியுள்ளார்.

அதன்படி, காங்கிரஸ் கட்சியில் பிரபல தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் அதிகாரப்பூர்வமாக அடுத்த வாரம் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்த எதிர்பார்ப்புமின்றி – எதையும் விரும்பாமல், கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த உதவும் தனது திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மட்டுமே கட்சி மேலிடத்திடம் பி.கே. விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

காங்கிரஸ் கட்சியில் அவர் இணையவுள்ளதாக கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் கூட, அவர் காங்கிரஸில் சேர்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி தீவிரமாக பேசப்பட்டது. ஆனால், அவை வெறும் ஊகங்களாக மாறிப்போயின; மாறாக, காங்கிரஸ் கட்சியையும் அது செயல்படும் விதத்தையும் வெளிப்படையாகவே பகிரங்கமாக விமர்சித்து வந்தார். ஆனால், சோனியா உடனான பி.கே.வின் தற்போதைய அடுத்தடுத்த சந்திப்புகள், இந்த முறை கட்சியில் இணைவது பற்றிய தகவல்களை, ஊகங்களாக கடந்து செல்லும் வாய்ப்பை குறைத்துள்ளது.