தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா மூன்றாவது அலை முடிவுக்கு வந்த நிலையில் நாடு முழுவதும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். ஆனால் டெல்லி , ஹரியானா உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனா, தென் கொரியா போன்ற நாடுகளில் பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்தியாவிலும் மீண்டும் பாதிப்பு வேகமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்தந்த மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. டெல்லியில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது. தெலங்கானாவில் 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் அபராதம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் அபராதம் வசூலிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. அபராதம் வசூலிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா அதிகரிப்பதால் பதற்றம் அடைய தேவை இல்லை என மத்திய அரசே கூறியுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே வழங்கி உள்ளோம். சென்னை ஐஐடியில் கொரோனா உறுதியான மாணவர்கள் உடல்நிலை சீராகவே உள்ளது” என்று கூறினார்.

சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஐஐடி வளாகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 19,20,21 ஆகிய தேதிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 700 பேருக்கு நேற்று வரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு அங்கேயே தனிமைபடுத்திக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். ஐஐடி விடுதி மூலம் தொற்று பரவியுள்ளது, மேலும் ஐஐடியில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்கள் தனிமைபடுத்த வேண்டும், வெப்பமானி மூலம் தொடர் பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அக்கறையுடன் மக்கள் முக கவசம் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நோய்த்தொற்று அறிகுறி இருந்தால் தவறாமல் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். பொதுமக்கள் வேலை செய்யும் இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை மண்டல அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்படும். வெளி மாநிலங்களில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் சுய மருத்துவ கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் . நோய்த்தொற்று இருப்பவர்கள் அதிகமாக மருத்துவமனைக்கு வருவதால் மருத்துவமனை உழியர்களுக்க்கு உரிய கட்டுப்பாடுடன் செயல்பட அறிவுறுத்தி உள்ளோம்.

தமிழகத்தில் 1.8 லட்சம் படுக்கைகள் கொரோனா உச்சத்தில் இருந்த போது தயாராக இருந்தது. தற்போது 1.1 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. ஆனால் இதில் 18 பேர் மட்டுமே படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஐ சி யு வில் இரண்டு பேர், ஆக்சிஜன் வசதியுடன் ஏழு பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இதுவரை அறிகுறி இல்லாமல் 256 பேர் வீட்டுத்தனிமையில் உள்ளனர்.

தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை தினசரி 4ஆயிரம் என்று குறைந்த நிலையில், நேற்று மட்டும் 1.20 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மேலும் பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். ஐஐடியில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளில் தேவைப்பட்டால் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்திட அறிவுறுத்துதல் செய்யபடும். மேலும் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்” என கூறினார்.