மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கிடைக்காததால்தான் மின் தடை: செந்தில் பாலாஜி

மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கிடைக்காததால்தான் மின் தடை. 41 இடங்களில் மட்டுமே மின்வெட்டு ஏற்பட்டதாகவும் மாலைக்குள் அதுவும் சரிசெய்யப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் மின்வெட்டுப் பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது. கோடை வெப்பத்தோடு மின்வெட்டும் சேர்ந்துகொள்ள மக்கள் வெக்கையில் வெந்துகொண்டிருக்கின்றனர். மின்வெட்டால் தொழிற்சாலைகள் இயங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியமைத்து ஓர் ஆண்டு நிறைவடைய உள்ளது. இந்த சூழலில் மின்வெட்டு பிரச்சினை பூதாகரமாக கிளம்பியுள்ளது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மின்வெட்டுப் பிரச்சினை எழவே இல்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின் வெட்டுப் பிரச்சினை குறித்து விளக்கம் அளித்துள்ளார். “மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கிடைக்காததால்தான் மின் தடை ஏற்படுகிறது. தமிழ்நாட்டுக்கு ஒரு நாள் மின் உற்பத்திக்கு 72,000 டன் நிலக்கரி தேவை ஆனால் ஒன்றிய அரசு கடைசியாக நாள் ஒன்றுக்கு 32,000 டன் நிலக்கரி மட்டுமே அளித்தது. மின்பற்றாக்குறையை சமாளிக்க 300 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று கூறினார்.

தமிழ்நாட்டில் 41 இடங்களில் மட்டுமே மின்வெட்டு ஏற்பட்டது என்றும் இதுவும் மாலைக்குள் சரி செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தமிழ்நாட்டில் போதுமான நிலக்கரி இல்லாதபோதும் தொழிற்சாலைகளுக்கு தடையின்றி மின் விநியோகம் செய்யப்படுகிறது என்றும் கூறினார்.

திமுகவின் இதற்கு முந்தைய ஆட்சிக் காலத்தில் 2006 -2011 காலகட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் கடுமையான மின்வெட்டு நிலவியது. எனவே மீண்டும் மின்வெட்டு காலகட்டம் திரும்புகிறதா என விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.