திமுக அரசின் தவறான முடிவுகளால் மின்வெட்டு: எடப்பாடி பழனிசாமி

தி.மு.க., அரசின் தவறான முடிவுகளால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தொடர் முன்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். தமிழகத்திற்கு 17,100 மெ.வா., வரை மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் 13,100 மெ.வா., மின்உற்பத்தியாகிறது. இதற்கு, தமிழக அரசு, மின்வாரியம் தேவையான நிலக்கரியை கொள்முதல் செய்யாததாலும், மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி கிடைக்காத காரணத்தினால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசின் தவறான முடிவுகள் தான் காரணம். கோடை காலம் வரும் போது மின்சாரம் தேவை அதிகரிக்கும். இந்த முன்யோசனையுடன் செயல்பட்டிருக்க வேண்டும்.

அதிமுக ஆட்சி காலத்தில் போதிய அளவு மின்சாரம் இருப்பு வைத்திருந்தோம். கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் உற்பத்தி செய்து வழங்கினோம். கோடை காலத்தில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக இருந்தது. கடந்த 2006 -11 திமுக ஆட்சியில் மின்வெட்டு நிலவியது. திறமையில்லாத ஆட்சியால் முறையாக மின்சாரம் வழங்கப்படவில்லை. தடையில்லா மின்சாரம் வழங்கினால், தொழிற்சாலைகள் இயங்கி வேலைவாய்ப்பு அதிகரிக்கும். திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து மின்வெட்டு ஏற்படுகிறது. கடநத காலத்திலும் ஏற்பட்டது. இன்றைய காலத்திலும் ஏற்படுகிறது.

ஜெயலலிதா முயற்சியினால், தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. அவரது மறைவிற்கு பிறகும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. இதனால், புதிய தொழிற்சாலைகள் வந்தன. தற்போது, அரசு சரியான முறையில் செயல்படவில்லை. அனல் மின் நிலையங்கள் முழுமையாக செயல்படாமல் மக்கள் அவதியடைகின்றனர். தொழிற்சாலைகள் இயங்கவில்லை. மாணவர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தூங்க முடியவில்லை. நிர்வாகம் சரியில்லாத அரசால் மின்வெட்டு ஏற்பட்டு அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். தடையில்லா மின்சாரத்தை வழங்காத காரணத்தினால் வெளிநடப்பு செய்துள்ளோம். இவ்வாறு பழனிசாமி கூறினார்.