மின்வெட்டு பிரச்னையைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்

அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு பிரச்னையைச் சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் தொடரும் அறிவிக்கப்படாத பலமணி நேர மின்வெட்டால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோடைக்காலத்தில் அதிகரிக்கும் மின்தேவைக்கேற்ப மின் உற்பத்தியை அதிகரிக்க முன்கூட்டியே எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் மெத்தனப்போக்கே தற்போதைய மின்தடைக்கு முக்கியக் காரணமாகும். கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்படாத பலமணி நேர மின்வெட்டு நிலவியது போல், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு ஏற்பட்டு, தமிழகம் இருளில் மூழ்கும் என்று மக்களிடம் நிலவிய பொதுக்கருத்தினை மெய்ப்பிக்கும் விதமாகத் தற்போது தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. பகல் முழுவதும் கோடை வெப்பத்தின் பிடியில் சிக்கிய மக்கள், இரவில் பல மணி நேரங்களாகத் தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உறக்கமின்றித் தவித்து வருவது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் 10 தேதி தமிழ்நாட்டில் ஒரு நொடிகூட மின்வெட்டு இருக்காது, தேவையான நிலக்கரியைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய மின்சாரத்துறை அமைச்சர், தற்போது மத்திய தொகுப்பிலிருந்து சரிவர நிலக்கரி வரவில்லை என்று காரணம் கூறுவதை எவ்வாறு ஏற்க முடியும்? கடந்த ஆறு மாத காலமாக நிலக்கரியைப்பெற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும், கடந்த 18.04.2022 அன்று சட்டப்பேரவையில் மின்வெட்டு குறித்த கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய மின்துறை அமைச்சர், மத்திய தொகுப்பிலிருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் 800 மெகாவாட் மின்சாரம் திடீரெனத் தடைப்பட்டதே தற்காலிக மின்தடைக்குக் காரணம் என்றும், தமிழ்நாட்டில் தற்போது மின்வெட்டே இல்லை என்றும் கூறினார். ஆனால், அதன் பிறகும் தமிழ்நாட்டில் பல மணிநேர மின்வெட்டு நிலவி வருகிறது.

தமிழ்நாட்டில் 13000 மெகா வாட் என்ற அளவில் மட்டுமே ஒரு நாளைக்கான மின் உற்பத்தித் திறன் உள்ள நிலையில், ஒரு நாளைக்கான மொத்த மின்தேவையோ 17000 மெகா வாட் என்ற அளவில் இருக்கிறது. எனவே வெறும் 800 மெகா வாட் மின்சாரப் பற்றாக்குறையே மொத்த மின்வெட்டிற்கும் காரணம் என்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

தற்போதைய அறிவிக்கப்படாத மின்வெட்டால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், மாணவர்கள், நோயாளிகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். விடியல் ஏற்படுத்தப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, விடியும் வரை மக்களை இருளில் மூழ்க வைத்திருப்பதுதான், திமுக சொன்ன விடியல் ஆட்சியா? அல்லது இதற்கும் அணில்கள்தான் காரணமா? என்று மக்கள் வேதனை குரல் எழுப்புகின்றனர்.

மேலும், அறிவிக்கப்படாத மின்வெட்டால் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தியும் பெரிதளவில் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. ஆகவே, தமிழ்நாடு அரசு இனியாவது விழிப்படைந்து தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின்தடையைப் போக்கி, மக்கள் நலனைப் பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை போலீஸ் காவலில் உயிரிழந்த விக்னேஷ் மரணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;

சென்னை, திருவல்லிக்கேணியில் வாகனப்பரிசோதனையின்போது கைதுசெய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட தம்பி விக்னேஷ் அவர்கள் காவல்துறையினர் அடித்துத் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அண்மைக்காலமாக அதிகரித்து வரும் காவல்துறை மரணங்களும், அதனை மூடி மறைத்து காவல்துறையினரைக் காப்பாற்ற முயலும் திமுக அரசின் போக்குகளும் கடும் கண்டனத்திற்குரியது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்படும் இளைஞர்கள் காவல்துறையால் கடுமையாகத் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதுமான கொடும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22, அன்று விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சத்தியவான் தஞ்சாவூர், மேற்கு காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். செப்டம்பர் 17 அன்று விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சேலம், கிச்சிபாளையம் கார்த்திக், ஆத்தூர் சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

டிசம்பர் 09 அன்று விசாரணை சிறைவாசியாக புழல் சிறையில் அடைக்கப்பட்ட சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த சீனிவாசன் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவ்வாண்டு, ஜனவரி 11 அன்று கைதுசெய்யப்பட்டு நாமக்கல் கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பிரபாகரன் சிறைக்குள்ளேயே உயிரிழந்தார். பிப்ரவரி 04 அன்று நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த சுலைமான் என்பவர் விசாரணையின்போது உயிரிழந்தார். இதேபோல, கடந்தாண்டு டிசம்பர் 04. அன்று முதுகுளத்தூர் அருகே வாகனச்சோதனையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக நீர்க்கோழியேந்தலைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவர், கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு, வீடு திரும்பிய அன்று நள்ளிரவே திடீரென உயிரிழந்தார்.

இவையெல்லாம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டுக்காலத்திற்குள் நடைபெற்ற காவல்நிலைய மரணங்களாகும். கடந்த சனவரி 14 அன்று, முகக்கவசம் அணியவில்லை என்பதற்காக, சென்னை, கொடுங்கையூர் காவல்நிலையத்தில் வைத்து, சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரகீம் மீது நடத்தப்பட்ட மிகக்கொடூரமான கொலைவெறித்தாக்குதல், மாணவரின் முன்யோசனையால் காணொளிப்பதிவு செய்யப்பட்டு, வெளிச்சத்திற்கு வந்தது. இச்சம்பவங்களின் நீட்சியாகவே கடந்த ஏப்ரல் 18 அன்று, தலைமைச்செயலகக்குடியிருப்பு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட, கடற்கரையில் குதிரை ஓட்டும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த தம்பி விக்னேஷ் காவல்துறையால் தாக்கப்பட்டு, உயிரிழந்தக்கொடுமை நிகழ்ந்துள்ளது.

தம்பி விக்னேசின் உடலில் காயங்கள் இருந்துள்ளதும், அவசர அவசரமாக காவல்துறையே உடலை எரித்துள்ளதும் காவல்துறையினர் மீதானக் குற்றஞ்சாட்டின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துகிறது. உடற்கூறாய்வு செய்யப்பட்டப் பிறகு, உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டியதுதானே காவல்துறையினரின் வேலை? அதற்கு நேர்மாறாக, அவர்களது குடும்பத்தினரைச் செய்தியாளர்கள் சந்தித்துவிடாதவண்ணம் தடுத்து, தாங்களே முன்னின்று உடலை எரியூட்டும் வேலையைச் செய்தது எதற்காக? உத்திரப்பிரதேச மாநிலம், ஹாத்தரசில் நடந்ததற்கும், இதற்கும் இடையே என்ன வேறுபாடு? இவ்வளவுதான் மனித உயிர்க்கு மதிப்பா? ஏழைகளின் உயிரென்றால் மலிவாகப் போய்விட்டதா திமுக அரசுக்கு? இதுதான் சமூக ஆட்சியின் லட்சணமா?

எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது சாத்தான்குளம் இரட்டைப்படுகொலை வழக்கில் நீதிகேட்டு உரிமைக்குரல் எழுப்பிய முதல்வர் ஸ்டாலின், தற்போது தமது ஆட்சிக்காலத்தில் நடைபெற்று வரும் தொடர் சிறை மரணங்களைத் தடுக்கத் தவறியது ஏன்? தனது துறையின் கீழ்வரும் காவல்துறையால் ஒரு ஏழை எளிய கூலித்தொழிலாளிக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து ஒருவாரமாகியும் இதுவரை வாய்திறக்காது மௌனித்திருப்பது எதனால்? எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நீதி? ஆளுங்கட்சியாக வந்தவுடன் இன்னொரு நீதியா? காவல்துறையால் நிகழ்த்தப்படும் மரணங்களைக் கொலைவழக்காகப் பதிவுசெய்ய மறுப்பது பெரும் அநீதி இல்லையா? கடந்தாட்சியில் அதிமுக செய்ததற்கும், இப்போது திமுக செய்வதற்கும் இடையே என்ன வேறுபாடு? மரணத்திற்குக் காரணமான காவல்துறையினர் மீதான துறைரீதியான நடவடிக்கையே போதுமான தண்டனைதானென நினைத்துவிட்டாரா முதல்வர் ஸ்டாலின்? எளிய மக்கள் மீது அரச வன்முறையை ஏவிக்கொன்றொழித்து, உடலை எரித்து செய்தியை மறைப்பதுதான் சமூக நீதியா? திராவிட மாடல் ஆட்சியா? பேரவலம்! இம்மரணங்களுக்குத் தார்மீகப்பொறுப்பேற்று, காவல்துறையினர் மீது வழக்குத்தொடுத்து சிறைப்படுத்தாது, அவர்களைக் காப்பாற்ற நினைத்து மூடி மறைக்கும் திமுக அரசின் செயல் வெட்கக்கேடானது.

ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரடியாகத் தலையிட்டு, தம்பி விக்னேசின் மரணத்திற்குக் காரணமான காவல்துறையினர் மீது கொலைவழக்குப் பதிவுசெய்து, சிறைப்படுத்த வேண்டுமெனவும், உயிரிழந்த தம்பி விக்னேசின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் துயர் துடைப்பு நிதி வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.