நான் முதல்-மந்திரியாக இருந்தபோது மதக்கலவரங்கள் நடக்கவில்லை: குமாரசாமி

பா.ஜனதாவின் திட்டங்களுக்கு நான் அனுமதி வழங்கவில்லை. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது எங்கும் மதக்கலவரங்கள் நடக்கவில்லை என்று குமாரசாமி கூறியுள்ளார்.

ஜனதா தளம் (எஸ்) கட்சியை ஒழிக்க சித்தராமையா சதி செய்துள்ளதாக குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பங்காருப்பேட்டையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்துள்ளனர். 10, 20 நாட்களுக்கு பிறகு இந்த விவகாரத்தை அப்படியே கிடப்பில் போட்டு விடுவார்கள். இத்தகைய குற்றங்கள் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் உதவி செய்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். போலீஸ் நியமனத்துறையின் உயர் அதிகாரியின் அலட்சியத்தால் தான் இந்த முறைகேடு நடந்திருக்கும். மாநில அரசின் அனைத்து துறை நியமனங்களிலும் இத்தகைய முறைகேடுகள் நடந்து வருகின்றன. பணம் கொடுத்தால் வேலை என்ற நிலை தான் உள்ளது. சில இடங்களில் பணம் கொடுத்தும் வேலை கிடைக்காத நிலை உள்ளது. அத்தகையவர்கள் கொடுத்த பணத்தை பெற முடியாமல் தவிக்கிறார்கள். இத்தகைய முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் அரசுகள் பாடம் கற்றதாக தெரியவில்லை. விசாரணை நடத்துவது போல் நாடகமாடி அதன் பிறகு இந்த முறைகேடுகளை மூடி மறைத்து விடுகிறார்கள். தேர்வு முறையை பாழாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை.

போதை பொருள் கடத்தல் வழக்கு என்ன ஆனது என்பதை பாருங்கள். இதே போல் தான் அனைத்து முறைகேடுகளையும் குழிதோண்டு புதைப்பார்கள். ஜனதா தளம் (எஸ்) கட்சியை ஒழிக்க சித்தராமையா முயற்சி செய்ததால் தான் நான் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தேன். ஆனால் பா.ஜனதாவின் திட்டங்களுக்கு நான் அனுமதி வழங்கவில்லை. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது எங்கும் மதக்கலவரங்கள் நடக்கவில்லை. எங்களின் மதசார்பின்மை கொள்கையை யாருக்கும் விற்பனை செய்யவில்லை. ஜனதா தளம் (எஸ்) கட்சியை ஒழிக்க சித்தராமையா சதி செய்துள்ளார். இவ்வாறு குமாரசாமி கூறினார்.