பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் நிறைவேற்றுவார்: ராமதாஸ்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவார் என ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு அலுவலர் மற்றும் பணியாளர்கள் உரிமை நலச் சங்கம், தமிழக ஆசிரியர்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற சங்கம் ஆகிய இரு புதிய அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் அமைப்புகளின் தொடக்க விழா, சென்னை அண்ணா அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய டாக்டர் ராமதாஸ், “அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கையான பழைய ஓய்வூதியதிட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நிறைவேற்றுவார். உங்களின் கோரிக்கைகளுக்காக நான் போராடுவேன்” என்று கூறினார்.

பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ”பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு இப்போது பாதுகாப்பு இல்லை. தொடக்கக்கல்வி துறையில் 42% ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. புதிய கல்விக் கொள்கையை பொறுத்தவரை தாய்மொழியில் கல்வி, 6 வயது முதல் ஆரம்பக்கல்வி உள்ளிட்ட நல்ல அம்சங்களை வரவேற்கலாம். அதேநேரத்தில் இந்தி தேவையில்லை. தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கல்வியே போதுமானது. அரசியல் சாசனத்தின் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளும் அலுவல் மொழிகள்தான்” என்றார்.

தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரை புதிய கல்விக் கொள்கையை முற்றிலும் நிராகரித்து மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சமீபகாலமாக தமிழ்நாடு அரசின் பல்வேறு முயற்சிகளுக்கு பாமக ஆதரவளித்து வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ராமதாஸின் கூற்றும் அதற்கு வலு சேர்ப்பதாகவே உள்ளது. ஆனால் புதிய கல்விக் கொள்கையில் உள்ள சில அம்சங்களை ஏற்கலாம் என்று அன்புமணி கூறுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.