பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் ரத்து; சென்னை உயர் நீதிமன்றம்

பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பப்ஜி கேம் மூலம் ஆபாசமாக பேசி பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட பப்ஜி மதன் தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மாநிலத்தில் என்னால் எந்த சட்ட ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் அரசால் தடை செய்யப்பட்ட செயலியை நான் பயன்படுத்தவில்லை எனவும் கூறிய பப்ஜி மதன் தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அளித்த கோரிக்கையை உரிய காலத்தில் காவல்துறை பரிசீலிக்கவில்லை என்பதை ஏற்று பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். இதனால் பப்ஜி மதன் அவர் தனது எஞ்சிய வழக்கிலும் ஜாமீன் பெற்று வெளியே வரலாம் என கூறப்படுகிறது.