கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு

மாணவர்கள் போராட்டம் காரணமாக கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடந்தாண்டில் தமிழக அரசு ஏற்றது. இந்நிலையில் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அரசு கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளுக்கு நிகராக கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறி கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவரையற்ற போராட்டம் நடத்தி வரும் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி வருகின்றனர். இரவு பகலாக போராட்டம் தொடர்கிறது.

கல்வி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாமாண்டு மற்றும் பயிற்சி மருத்துவர்களை தவிர பிறருக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.