இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலின் உண்மையான நண்பர், அதன் பாதுகாப்பில் அக்கறை கொண்டவர் என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க பயங்கரவாதப் பட்டியலில் இருந்து ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து இஸ்ரேல், அமெரிக்கா என இரு நாட்டு தலைவர்கள் நேற்று முன்தினம் தொலைபேசியில் கலந்துரையாடினர்.

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே பதட்டங்களைக் குறைத்து, அமைதியான முடிவை புனித ரமலான் காலத்தில் உறுதிசெய்ய வேண்டும். இதுகுறித்து இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் அதிகாரிகளுக்கு இடையே நடந்துவரும் முயற்சிகள் குறித்து அவர்கள் பேசினர் என வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு வருகை தருமாறு அந்நாட்டின் பிரதமர் நப்தாலி பென்னட் விடுத்த அழைப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்றுக்கொண்டார். இதுதொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், வரும் மாதங்களில் இஸ்ரேலுக்கு வர விரும்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். பிரதமர் நப்தாலி பென்னட் விடுத்த அழைப்பை அதிபர் ஜோ பைடன் ஏற்றுக்கொண்டார் என தெரிவித்துள்ளது.