ரெயில்வேயில் பணியிடங்களை ரத்து செய்ய கூடாது: ராமதாஸ்

செலவு குறைப்புக்காக ரெயில்வேயில் பணியிடங்களை ரத்து செய்ய கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்திய தொடர்வண்டி வாரியத்தின் தலைவர் வினய்குமார் திரிபாதி, அனைத்து மண்டல தொடர் வண்டித் துறை பொது மேலாளர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், தொடர்வண்டித் துறையில் தட்டச்சர்கள், சுகாதார உதவியாளர், தச்சர், பெயிண்டர், உதவியாளர், உதவி சமையலர், தோட்டக்காரர், பராமரிப்பாளர்கள், உணவு விற்பனையாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இருப்பவர்கள் அனைவரையும் வேறு பணிக்கு மாற்றவும், இப்பணியிடங்கள் அனைத்தும் முக்கியமற்றவை என்பதால் அவற்றை உடனடியாக ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பணியிட மாற்றம் செய்யப்படும் அனைவருக்கும் அவர்கள் ஏற்கனவே பெற்று வந்த அதே ஊதியம் வழங்கப்படும்; பணிப்பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் இந்திய ரெயில்வே வாரியம் அறிவித்திருக்கிறது. அதனால், இப்போது பணியில் உள்ள எவரும் உடனடியாக வேலை இழக்க மாட்டார்கள் என்பது உண்மை தான். ஆனால், பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் ரத்து செய்யப்படும் என்பதால், ரெயில்வேத் துறையில் எதிர்கால வேலைவாய்ப்புகள் மிகப்பெரிய அளவில் குறையும்.

ரெயில்வேத் துறையில் உள்ள அதிக முக்கியத்துவம் இல்லாத பணியிடங்கள் ரத்து செய்யப்படுவதற்காக தொடர்வண்டித்துறை தரப்பில் கூறப்படும் காரணம் நிதிப்பற்றாக்குறை தான். இந்திய ரெயில்வேயின் ஒட்டுமொத்த வருமானத்தில் 67 சதவீதம் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கே செலவிடப்படுவதாகவும், செலவைக் குறைக்க முக்கியத்துவம் அற்ற பணிகளை ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் ரெயில்வே வாரியம் தெரிவித்திருக்கிறது. இந்த வாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தொடர்வண்டித்துறையில் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் தனியார் மயமாக்கலை கைவிட்டு, அந்த சேவைகளை சொந்த பணியாளர்களைக் கொண்டு மேம்படுத்தினால், தொடர்வண்டித் துறையின் வருவாய் அதிகரிக்கும். அதை செய்ய வேண்டிய தொடர்வண்டித்துறை, அந்த சேவைகளை எல்லாம் தனியாரிடம் ஒப்படைத்து விட்டு, அதற்கான பணியிடங்களை ரத்து செய்வது தவறு ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.