விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரத்தில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்!

சென்னையில் விசாரணைக் கைதி இளைஞர் விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில், சட்டப்பேரவையில், அதிமுக கவன ஈரப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது

சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் 2ஆவது தெருவைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் அவரது நண்பரான திருவல்லிகேணியைச் சேர்ந்த சுரேஷ் (28) ஆகியோர், கடந்த 18 ஆம் தேதி நள்ளிரவு, ஆட்டோவில், புரசைவாக்கம் கெல்லீஸ் சாலையில் வந்துள்ளனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமை செயலக காலனி ஸ்டேஷன் எஸ்ஐ பெருமாள், தலைமை காவலர் தீபக், காவலர் பவுன்ராஜ் ஆகியோர் ஆட்டோவை மடக்கி விசாரித்துள்ளனர். அப்போது விக்னேஷ், போலீசாரை எதிர்த்து பேசியதாகத் தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த போலீசார், ஹெல்மெட்டை கொண்டு விக்னேஷை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்த விக்னேஷை, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்துள்ளனர். மறுநாள் காலை விக்னேஷுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகவும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் விக்னேஷ் இறந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களிடம் கஞ்சா மற்றும் கத்தி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, போலீஸ் விசாரணையின் போது விக்னேஷ் மரணம் அடைந்ததையடுத்து சம்பந்தப்பட்ட எஸ்.ஐ உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் விசாரணைக் கைதி இளைஞர் விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில், சட்டப்பேரவையில், அதிமுக கவன ஈரப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சிபிஐ வசம் ஒப்படைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ், “விக்னேஷ் காவல்நிலையத்தில் காவலர்களினால் தாக்கப்பட்டு மரணமடைந்துள்ளார் என்ற செய்தி மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அம்மாவின் ஆட்சி காலத்தில் இது போன்ற சம்பவம் நடைபெற்ற போது நாங்களே இதனை முதலில் சிபிசிஐடி வசமும், பிறகு அதனை சிபிஐ வசம் மாற்றினோம். காவலர் தாக்குதலில் இறந்த விக்னேஷ் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் இவ்வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.

இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித் துணைத் தலைவருமான ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆட்சிக்கு வருவதற்காக மக்கள் மீது அக்கறை இருப்பது போல் காட்டிக் கொள்வதும், போலி வாக்குறுதிகளை அளிப்பதும், சிறிய சம்பவங்களை பெரிதாக்குவதும், சாத்தியமில்லாததை சாத்தியமாக்குவதாக கூறுவதும், ஆட்சிக்கு வந்த பிறகு பிறர் மீது பழி போடுவதும், ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றுவோம் என்று சாக்குபோக்கு சொல்வதும், மக்களைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதும் தி.மு.க.விற்கு கைவந்த கலை.

அண்மையில், புரசைவாக்கம், கெல்லீஸ் அறிவிப்புக்குறி அருகே காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஆட்டோவில் சென்று கொண்டிருந்த திருவல்லிக்கேணியை சேர்ந்த சுரேஷ் மற்றும் – பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோரை மடக்கியதாகவும், அவர்களிடம் கஞ்சா மற்றும் கத்தி இருந்ததாக தெரிவித்து அவர்களை தலைமைச் செயலக குடியுருப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததாகவும், அதன்பின் ரகசிய இடத்திற்கு கூட்டிச் சென்று அடித்து சித்ரவதை செய்ததாகவும், இந்த சித்ரவதையில் குதிரை ஒட்டி பிழைப்பு நடத்தி வந்த ஏழை இளைஞன் விக்னேஷ் மறுநாள் வாந்தி எடுத்து உயிரிழந்ததாகவும் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் செய்திகள் வந்தன. காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது ஏற்பட்ட இந்த உயிரிழப்பிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விக்னேஷ் குடும்பத்தாருக்கு, விக்னேஷுக்கு பணி கொடுத்தவர் ஒரு இலட்சம் ரூபாய் ஈமச் சடங்கிற்காக கொடுத்ததாகவும், இந்தப் பணத்தை காவல் துறையினர் அளித்ததாகவும் அவர் திரு. விக்னேஷ் அவர்களின் சகோதரரான திரு. வினோத் அவர்களிடம் கூறி இருப்பதாகவும் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் செய்திகள் வந்தன.மேற்படி சம்பவத்தில் காவல் துறையினர் சார்பில் ஒரு இலட்சம் ரூபாய் அவரது குடும்பத்தினருக்கு கொடுக்கப்படுகிறது என்றால், அங்கே காவல் துறையினர் தவறு புரிந்திருக்கிறார்கள் என்றுதான் அதற்குப் பொருள். ‘மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும்’ என்பதற்கேற்ப காவல் துறையின் நடவடிக்கை அமைந்திருக்கிறது. இதன்மூலம், அந்த இளைஞனின் மரணத்திற்கு காவல் துறையினர்தான் காரணம் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

ஆட்சியில் இல்லாத போது சிறியதை பெரிதாக்குவதும், ஆட்சிக்கு வந்துவிட்டால், மூடி மறைப்பதும் தி.மு.க.விற்கு வாடிக்கை. அந்த வகையில், மேற்படி சம்பவத்தை மூடி மறைக்க தி.மு.க. அரசு முயற்சி செய்கிறது என்கிற சந்தேகம் அனைவர் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. இதில் தொடர்புடைய காவல் துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, வழக்கு குற்றப் பிரிவு, குற்றப் புலானாய்வுத் துறை விசாரணைக்கு மாற்றப்பட்டு இருந்தாலும், இந்தத் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் வருவதால், தங்களுக்கு நீதி கிடைக்காது என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கருதுகின்றனர்.

விக்னேஷ் அவர்களின் மரணத்திற்கு நீதி கிடைக்க காவல் துறையை தன் வசம் வைத்திருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வகையில் மேற்படி வழக்கினை மத்திய புலனாய்வுத் துறை, அதாவது சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும், காவல் துறை கட்டுப்பாட்டில் இருந்த போது மரணமடைந்த விக்னேஷ் குடும்பத்திற்கு 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.