அயோத்தியா மண்டபத்தை ஸ்ரீராம் சமாஜத்திடம் ஒப்படைக்க வேண்டும்: ஐகோர்ட்

சென்னை அயோத்தியா மண்டபத்தை ஸ்ரீராம் சமாஜத்திடம் ஒப்படைக்க வேண்டும். அயோத்தியா மண்டபம் கோவில் என்பதற்கான தீர்க்கமான எந்த காரணங்களும் கூறாமல், தக்காரை நியமனம் செய்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீராம் சமாஜம் என்ற அமைப்பு சார்பில் அயோத்தியா மண்டபம் 1954-ம் ஆண்டு கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டது. இங்கு நிதி முறைகேடுகள் நடப்பதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அயோத்தியா மண்டபத்தை கடந்த 2013-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் வகையில், தக்காரை நியமித்து அன்றைய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஸ்ரீராம் சமாஜம் சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த தனி நீதிபதி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து கடந்த மாதம் உத்தரவிட்டார். அதையடுத்து அயோத்தியா மண்டபம் நிர்வாகத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் கையில் எடுத்தனர்.

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஸ்ரீராம் சமாஜம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது அயோத்தியா மண்டபம் கோவில் என்பதற்கான தீர்க்கமான எந்த காரணங்களும் கூறாமல், தக்காரை நியமனம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். மேலும், மாற்றுத் தீர்வு இருப்பதாகச் சொல்லி 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவைவும் நீதிபதிகள் ரத்து செய்தனர். அத்துடன், அயோத்தியா மண்டபத்தை ஸ்ரீராம் சமாஜத்திடம் உடனடியாக ஒப்படைக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஸ்ரீராம் சமாஜத்திற்கு எதிரான புகார் குறித்து புதிதாக விசாரணையை தொடர தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விசாரணைக்குப் பின் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.