மாணவர்கள் ஆசிரியர்களை உயர்வாக மதிக்க வேண்டும்: டிஜிபி சைலேந்திர பாபு

ஆசிரியர்களை உயர்வாக மதிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை கூறியுள்ளார்

தமிழ்நாட்டில் கடந்த நாட்களாக சில மாணவர்கள் ஆசிரியர்களிடம் அத்துமீறி நடந்து கொள்ளும் வீடியோக்கள் சமூகவளைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு அறிவுரைகள் கூறி டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கூறி இருப்பதாவது:-

மாணவர்களுக்கு வணக்கம். இரண்டு காணொலிகளைப் பார்தேன். இதைப்பார்க்கும்போது பாரதியார் கூறியதைப் போல் நெஞ்சு பொறுக்குதில்லையே என்பதுதான் நினைவுக்கு வந்தது. நானும் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். நம் பெற்றோர்கள் ஏன் நம்மை அரசு பள்ளியில் சேர்த்தார்கள் என்று நாம் நினைத்துப் பார்த்தது உண்டா?. அவர்களிடம் சொத்து கிடையாது. ஆனால் உங்களுக்கு சொத்து உள்ளது. அரசு பள்ளி, விளையாடு மைதானம், வகுப்பறை, ஆசிரியர்கள்தான் உங்கள் சொத்து. தற்போது அரசு பள்ளிகளுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. பள்ளிக்கு மிகப்பெரிய கனவுகளோடு நாம் வருகிறோம். எனவே மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். ஆசிரியர்களை உயர்வாக மதிக்க வேண்டும். இவ்வாறு சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.