அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொரோனா தொற்று உறுதி!

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த தகவலை வெள்ளை மாளிகை உறுதி படுத்தியுள்ளது. கொரோனா தொற்று குணமாகும் வரை அவர் தனது பணிகளை கானொலி மூலம் மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கமலா ஹாரிசுக்கு (57) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஆனால், அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை. தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அவர், துணை அதிபர் இல்லத்தில் இருந்து பணியாற்றுவார். கொரோனா தொற்றில் இருந்து அவர் பூரண குணமடைந்ததும் வெள்ளை மாளிகை திரும்புவார். கொரோனா வழிகாட்டுதல்கள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைகளை அவர் பின்பற்றி வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமலா ஹாரிஸ், மாடர்னா கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை பதவியேற்கும் சில வாரங்களுக்கு முன்பும், இரண்டாவது டோஸை 2021ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்ற பிறகும் செலுத்திக் கொண்டார். கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் பூஸ்டர் டோஸையும், கடந்த 1ஆம் தேதி கூடுதல் பூஸ்டர் டோஸையும் அவர் செலுத்திக் கொண்டார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகிய இருவருடனும் கமலா ஹாரிஸ் நெருங்கிப் பழகியதால் அவர்களுக்கும் தொற்று பாதிப்பு குறித்த அச்சம் ஏற்பட்டது. ஆனால், அவர்கள் இருவருடனும் கமலா ஹாரிஸ் நெருங்கிப் பழகவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.