இந்தியாவை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு மறைமுக ஆதரவு அளித்து வருவதால் இந்தியாவை அமெரிக்கா முதன்முறையாக கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு இந்தியா தொடர்ந்து மறைமுக ஆதரவளித்து வருவதால், அறிவுசார் சொத்துரிமை விவகாரத்தில் முதன்முறையாக இந்தியாவை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது. அதனால், அடுத்தடுத்த நாட்களில் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் என்று கூறப்படுகிறது.

அறிவுசார் சொத்துரிமை என்பது ஒருவரது அறிவின் வெளிப்பாடான கருத்துகள், வணிக முறைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், கலை படைப்புகள் போன்றவை வகைப்படுத்தப்பட்டுள்ளது. எழுத்தாளர்கள், கலைஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், வணிகர்கள் தங்களின் அறிவுசார் சொத்துகளை மற்றவர்கள் முறைகேடாக திருடிவிடாமல் பாதுகாப்பது அவசியமாகிறது. இதற்கு அதை காப்புரிமை, பதிப்புரிமை செய்வது அவசியம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப். 26ம் தேதியன்று உலக அறிவுசார் சொத்துரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ‘யுஎஸ் ஸ்பெஷல் – 301’ என்ற பெயரில் வெளியிட்ட அறிக்கையில், ‘அறிவுசார் சொத்துரிமை விஷயத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததால் இந்தியாவை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இந்த கருப்புப் பட்டியலில் உள்ளன. தற்போது இந்தியாவை முதன்முறையாக அமெரிக்கா கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளதால், இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. உக்ரைன் போரில் அமெரிக்காவிற்கு இந்தியா ஆதரவு அளிக்காததால், இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அறிவுசார் சொத்துரிமை விவகாரத்தில் இந்தியாவை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளதால், இனி வரும்காலத்தில் இந்தியா மீது அமெரிக்கா அடுத்தடுத்த பொருளாதாரத் தடைகளை விதிக்கலாம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

உண்மையில், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் அமெரிக்க நிறுவனங்களின் தொழில்நுட்பத்தையும், தயாரிப்புகளையும் நகலெடுப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. இதனால், அமெரிக்க நிறுவனங்களுக்கு பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க வர்த்தக நிறுவனங்களின் புகாரின் பேரில் இந்தியாவுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அர்ஜென்டினா, சிலி, இந்தியா, இந்தோனேசியா, வெனிசுலா ஆகிய நாடுகள் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் முன்னுரிமை கண்காணிப்புப் பட்டியலில் அலுவலகத்தில் ஏற்கனவே இருந்தன. ஆனால் தற்போது அவை தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரின் டாய் கூறுகையில், ‘அறிவுசார் சொத்துரிமை விவகாரத்தில், எங்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்தியா உட்பட 7 நாடுகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 20 நாடுகள் கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன’ என்றார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், அடுத்தடுத்த நாட்களில் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதால் இந்திய வர்த்தகம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.