முகப்பருவிலிருந்து விடுதலை பெற..

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். கல்லூரி செல்லும் பெண்களில் சிலருக்குப் முகப்பருக்களால் ஏற்படும் பிரச்சினை அவர்களின் முக அழகை மட்டுமின்றி அகத்தின் அழகையும் பாதிப்பதாக மாறிவிடுகிறது. அத்தகையவர்களுக்குப் பருக்களைப் போக்க சில யோசனைகள்:

உணவில் கீரை மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

முகத்தில் தோன்றும் பருக்களை ஒரு போதும் கிள்ளாதீர்கள். இது முகத்தில் வடுக்களை ஏற்படுத்துவதோடு
பருக்களை மேலும் அதிகரிக்க வழி செய்கிறது.

பருக்களைப் போக்குகிறோம் என்று கடையில் கிடைக்கும் கண்ட கண்ட மருந்துகளை வாங்கிப் பூசாதீர்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து வாங்கி மட்டுமே பூச வேண்டும்.

கொழுப்பு அதிகம் உள்ள பொருள்கள், அசைவம், எண்ணெய் பொருள்கள் போன்றவற்றை முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.

சோப்புக்குப் பதிலாகப் பச்சைப் பயிறு மாவைத் தேய்த்துக் குளிக்கலாம்.

குளிக்கும் நீரில் வேப்பிலைகளைப் போட்டுக் குளித்தாலும் கிருமிகளைத் தவிர்க்கலாம்.

வீட்டிலேயே பேஷியல் செய்து கொள்வது நல்லது. உங்கள் தோலுக்கு உகந்த பேஷியல் கிரீம் எதுவென்று டாக்டரிடம் விசாரித்து அதைப் பயன்படுத்தலாம்.

எண்ணெய் வடியும் முகம் உள்ளவர்களுக்கே முகப்பரு வரும். அடிக்கடி குளிர்ந்த நீரால் முகத்தைத் துடைத்துக்கொள்வது நல்லது.

மலச்சிக்கல் இருந்தாலும் பருக்கள் வரும். அதனால் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

தூசு நிறைந்த பகுதியில் வாகனத்தில் செல்ல நேர்ந்தால் முகத்தை மெல்லிய பருத்தித் துணியால் மூடிக்கொள்ளுங்கள்.

கஸ்தூரி மஞ்சள், நன்னாரி வேர், எலுமிச்சை தோல், ஆரஞ்சு தோல், பயத்தம் மாவு, கடலை மாவு, சீயக்காய் ஆகியவற்றைக் கலந்து அரைத்து வைத்துக் கொண்டு சோப்புக்குப் பதிலாகப் பயன்படுத்துவது நல்ல பலனை அளிக்கும்.