பெங்களூரு மழை-வெள்ள பாதிப்புக்கு ரியல் எஸ்டேட் தொழிலே காரணம்: ரம்யா

பெங்களூரில் மழை சேதத்துக்கு எம்.எல்.ஏ.,க்களின் ரியல் எஸ்டேட் தொழிலே காரணம் என நடிகை ரம்யா குற்றம் சாட்டி உள்ளார்.

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பெய்து வரும் மழை-வெள்ளம் தொடர்பாக நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகாவில் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? 26 பேர் ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்று சொல்கிறார்கள். அது திகைப்பூட்டும் எண்ணிக்கை. ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள இந்த 26 எம்.எல்.ஏ.க்களும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் தான். நீங்கள் தான் ரியல் எஸ்டேட் அதிபர்களை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்துள்ளீர்கள். எனவே தயவுசெய்து வாக்களிக்கும் முன் யோசித்து புத்திசாலிதனமாக செயல்படுங்கள்.

பெரும்பாலான மக்கள் குறிப்பாக நகர்ப்புற மக்கள் தேர்தலில் வாக்களிப்பது இல்லை. ஆனால், வெள்ள பாதிப்பு போன்ற நேரத்தில் மட்டும், அவர்கள் மீது கோபம் கொள்கிறோம். இதுபோன்ற நிலைக்கு, நம்மை நாமே குற்றம் சொல்லி கொள்ள வேண்டி உள்ளது. நாம் இருக்கும் தற்போதைய நிலைக்கு நாம் அனைவரும் தான் காரணம். அரசியல் கட்சிகள் பணம் உள்ளவர்களுக்கு மட்டும் (பெரும்பாலும் ரியல் எஸ்டேட்) போட்டியிட டிக்கெட் கொடுக்கப்படுவது ஏன்?. ஒரு எம்.எல்.ஏ. வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள செலவு ரூ.40 லட்சம். ஆனால் தேர்தல் சமயத்தில் அவர்கள் கோடிக்கணக்கில் செலவிடுகிறார்கள். இது ஏன் என யோசித்தால், அதிலேயே பதில் உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.