திமுக அரசை நினைத்தால் பிபி ஏறுது: நடிகை கஸ்தூரி

சொத்துவரி, பால்பொருள், பருப்பு விலைய ஏத்திய திமுக அரசு மின்கட்டணத்தையும் உயர்த்தியது. அடுத்தது எதை ஏத்த போறாங்களோன்னு நினைக்க நினைக்க நமக்கு பிபி ஏறுது என, நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றார். இந்நிலையில் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மாநிலத்தில் வரி உயர்வு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவில்லை. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். ஆனால் இது நீண்டகாலம் நீடிக்கவில்லை. அதாவது சமீபகாலமாக தொடர்ச்சியாக வரி உயர்வு, கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்சிகளில்‌ சொத்து வரி விகிதங்களை 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தி சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. அதன்பிறகு ஜிஎஸ்டியை காரணம் காட்டி ஆவின் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மின்கட்டண உயர்வும் கடந்த 10ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இந்நிலையில் தான் நடிகை கஸ்தூரி, திமுக அரசு பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். அதில், ‛‛ஏற்கனவே சொத்து வரியை ஏத்துனாங்க பால்பொருள் விலை, பருப்பு விலை எல்லாம் ஏறியாச்சு, மறுபடியும் மின்சார கட்டணம் ஏத்திட்டாங்க. இப்போது water sewage கட்டணமும் ஏறிடுச்சு. அடுத்தது எதை ஏத்த போறாங்களோன்னு நினைக்க நினைக்க நமக்கு BP ஏறுது” என திமுக அரசின் செயல்பாடு பற்றி குறிப்பிட்டுள்ளார்.