‘அரண்மனை 4’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது!

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை 4’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பங்களைக் குதூகலப்படுத்திய பேய் படம் அரண்மனை. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகம் விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. குஷ்பு சுந்தர் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்கி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. சுந்தர் சி உருவாக்கிய அரண்மனை படம், தமிழில் பேய் படங்களைக் குழந்தைகளும் கொண்டாடிப் பார்க்கும் வண்ணம் மாற்றிய படமாகும். முதல் மூன்று பாகங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, தற்போது நான்காம் பாகம், மிகப்பெரும் பொருட்செலவில், பெரும் நட்சத்திர கூட்டணியுடன் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், தீரஜ் விஷ்ணு ரத்தினம், S.நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன், உட்பட பெரும் எண்ணிக்கையிலான நட்சத்திரக்கூட்டம் இணைந்து நடித்துள்ளனர்.

முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் சுந்தர் சி. 2024 பொங்கல் அன்று அரண்மனை 4 வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தோற்றத்தை பொறுத்தவரை அரண்மனைக்கு வெளியே பெண் ஒருவர் இரண்டு குழந்தைகளுடன் நின்றுகொண்டிருக்கிறார். அரண்மனைக்கு பின்னால் பேய் உருவம் ஒன்று காட்டப்படுகிறது.