சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை 4’ ஏப்ரல் வெளியீடு!

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை 4’ படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்குப் பின் படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானது ‘அரண்மனை’. 2016-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சித்தார்த் நடித்திருந்தார். 2021-ம் ஆண்டு இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியானது. ஆர்யா, ராஷிகண்ணா, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஹாரர் – காமெடி ஜானரில் சீரிஸாக வெளியாகும் இப்படத்தின் நான்காவது பாகத்துக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்தப்படத்தையும் சுந்தர்.சியே இயக்குகிறார். இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கேஜிஎஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹிப்ஹாப் ஆதி படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி மாதம் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் தேதி மாற்றப்பட்டது. தற்போது ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேதி குறிப்பிடப்படவில்லை. தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பின் படம் வெளியாகும் என தெரிகிறது.