அதிமுக பொதுக்குழு: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு!

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் இன்று மேல்முறையீடு செய்துள்ளார்.

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து முன்னாள் முதல்வர் பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ‘சென்னையில் கடந்த ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்’ என்று ஆகஸ்ட் 17-ஆம் தேதி தீா்ப்பளித்தாா். தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும், என கடந்த சில தினங்களுக்கு முன் நீதிபதிகள் துரைசாமி, சுந்தா் மோகன் அமர்வு தீர்ப்பளித்தது.

இந்நிலையில், இன்று இந்த தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.