பயிர்க்காப்பீடு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்: ராமதாஸ், வாசன் வலியுறுத்தல்!

சம்பா பயிர்க்காப்பீட்டுக்கான காலக் கெடுவை நவம்பர் மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவடைவதாக தமிழக வேளாண் துறை அறிவித்திருக்கிறது. காப்பீடு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் போதுமானது அல்ல. தமிழ்நாட்டில் சம்பா நடவு மற்றும் விதைப்புப் பணிகள் இப்போது தான் தீவிரம் அடைந்து வருகின்றன. பருவமழை காரணமாக பல இடங்களில் நடவுப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. சம்பா நடவுப் பணிகள் முடிவடைவதற்கு முன்பாகவே காப்பீட்டுக்காக அவகாசத்தை முடித்துக் கொள்வது சமவாய்ப்பு ஆகாது.

காவிரி பாசன மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் 40%க்கும் குறைவான விவசாயிகள் மட்டும் தான் சம்பா பயிருக்கு காப்பீடு செய்துள்ளனர். கால அவகாசம் நீட்டிக்கப்படாவிட்டால் 60%க்கும் கூடுதலான விவ்சாயிகளுக்கு பயிர்க்காப்பீடு மறுக்கப்படும். இது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். வடகிழக்கு பருவமழையால் விவசாயிகள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்கால பாதிப்புகளை சமாளிக்க பயிர்க்காப்பீடு அவசியம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு சம்பா பயிர்க்காப்பீட்டுக்கான காலக் கெடுவை இரு வாரங்களுக்கு, அதாவது நவம்பர் மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரை நவம்பர் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால் நடவு முடியும் தருவாயில், தொடர் மழை, பொருளாதார சூழ்நிலை ஆகிய காரணங்களால் அரசு குறிப்பிட்ட 15-ம் தேதிக்குள் ஏழை, எளிய விவசாயிகளால் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலை இருந்தது. குறிப்பாக நடவு பணி முழுமையாக முடிந்த பிறகு, அடங்கல் நகல் பெற்று காப்பீடு செய்ய முடியும். இச்சூழலில் நவம்பர் 15-ம் தேதிக்குள் பருவ நெற்பயிரை காப்பீடு செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் குறிப்பிட்ட தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய முடியவில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, விவசாயப் பணிகள் தடைபட்டு, பயிர் நடவிலும் பாதிக்கப்பட்டு, காப்பீடும் செய்ய இயலாத சூழலில் உள்ளதால் அனைத்து விவசாயிகளின் நலனை கவனத்தில் கொண்டு பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை இன்னும் நீட்டித்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.