சிரியாவில் இனி தரைப்படைகள் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளும்: துருக்கி அதிபர்

சிரியாவில் இனி தரைப்படைகள் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளும் என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு ஆசிய நாடுகளான துருக்கியும், சிரியாவும் அண்டை நாடுகள். வடகிழக்கு சிரியாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள சிரியா மக்கள் பாதுகாப்பு படை என்ற குர்திஸ் ஆயுதக் குழுவை அழிக்கும் நோக்கத்துடன், துருக்கி தங்கள் எல்லைப்புறத்தில் இருந்து சிரியா மீது தாக்குதல் தொடுத்து வருகிறது. இந்தநிலையில் துருக்கியை சமாளிப்பதற்காக சிரியாவின் அரசுப் படைகளுடன் சமரசம் செய்துகொண்டது சிரியா ஜனநாயகப் படை.

இந்தநிலையில் கடந்த நவம்பர் 13ம் தேதி, துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் குண்டு வெடித்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டு, 80 பேர் படுகாயமடைந்தனர். சுற்றுலா பகுதியில் குண்டு வெடிப்பு நடந்ததால், உலகநாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியும், சிரியா ஜனநாயகப் படையும் தான் காரணம் என துருக்கி குற்றம் சாட்டியது. இக்குற்றச்சாட்டை குர்திஸ் ஆயுதக் குழுவான குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி மறுத்துள்ளது.

அதையடுத்து இச்சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று சிரியா மற்றும் ஈராக்கில் துருக்கி வான்வழி தாக்குதலை நடத்தியது. ஈராக்கில் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி செயல்படும் பகுதிகளையும், சிரியாவின் மேற்கு பகுதியில் சிரியா மக்கள் பாதுகாப்பு படை செயல்படும் இடங்களிலும் ஏவுகனை மற்றும் போர் விமானங்கள் மூலம் துருக்கி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடக்கு மற்றும் வடகிழக்கு சிரியாவில் ஆகிய துருக்கியின் எல்லை பகுதியில் நேற்று இரவு குர்தீஸ்தான் தொழிலாளர் கட்சி, ஆபரேஷன் க்ளா-ஸ்வார்ட் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதில் 31 பேர் கொல்லப்பட்டதாக இங்கிலாந்தை தளமாகக் கொண்ட கண்காணிப்புக் குழுவான, மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் துருக்கியின் பதிலடி நிச்சயம் உண்டு எனவும், இனி தரைப்படைகளை பயன்படுத்த போவதாக துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார். கத்தாரில் இருந்து துருக்கிக்கு திரும்பிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வடக்கு சிரியாவில் அங்காரா மற்றும் குர்திஷ் போராளிகள் நடத்திய கொடிய தாக்குதலைத் தொடர்ந்து, சிரியாவில் தரைப்படை நடவடிக்கையை துருக்கி தொடங்கும். இனி வான்வழி நடவடிக்கை மட்டும் பத்தாது என தெரிந்து கொண்டோம். திறமையான அதிகாரிகள், எங்கள் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தலைமைப் அதிகாரிகள் இணைந்து தாக்குதலுக்கு பயன்படுத்த வேண்டிய தரைப்படையின் அளவை தீர்மானிப்பார்கள். எல்லை மீறுபவர்களுக்கு நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம்’’ என்று அவர் கூறினார்.