அமெரிக்காவில் வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி!

அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள வால்மார்ட் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் உயிரிழந்தார்.

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம் செசப்ஹு நகரில் வால்மார்ட் நிறுவனத்தின் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் நேற்று இரவு (இந்திய நேரப்படி இன்று காலை) ஊழியர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த சூப்பர் மார்க்கெட் மேலாளர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். மேலாளர் துப்பாக்கிச்சூடு நடத்தியதை கண்டு அதிர்ச்சியடைந்த சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள தலை தெறிக்க ஓடினர். ஆனால், தொடர்ந்து மேலாளர் துப்பாக்கிச்சூட்டு நடத்தினார்.

இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால், மேலாளர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் 6 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சூப்பர் மார்க்கெட் மேலாளரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடந்த அந்த வணிக வளாகத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.