பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா 100 மில்லியன் டாலர் நிராவரண உதவி!

பாகிஸ்தானில் பருவகால மழை பாதிப்புகளால் கடந்த ஆண்டில் 3.3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டனர். பாகிஸ்தான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் மேலும் 100 மில்லியன் டாலரை உணவு பாதுகாப்பு உதவி தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் பருவகால மழை பாதிப்புகளால் கடந்த ஆண்டில் அந்நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சாலைகளும், பாலங்களும் முறையே துண்டிக்கப்பட்டும், நீரில் அடித்துச் செல்லப்பட்டன. நாட்டில் 3.3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டனர். பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புக்கு 1,700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கானோர் வெள்ள பாதிப்பில் காயமடைந்தனர். இந்த நெருக்கடியான சூழலில் உலக நாடுகளின் உதவியை பாகிஸ்தான் எதிர்பார்த்தது.

இதற்கிடையே, பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி, அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோனி பிளிங்கனை வாசிங்டன் நகரில் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர், முதல் கட்டமாக பாகிஸ்தானின் வெள்ள நிவாரண மற்றும் மனிதநேய அடிப்படையிலான நிதி உதவியை அமெரிக்கா ஒதுக்கியது. இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் மேலும் 100 மில்லியன் டாலரை உணவு பாதுகாப்பு உதவி தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. காய்கறிகள், உணவுப் பொருட்களின் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன. பாகிஸ்தானில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. வெங்காயத்தின் விலை 415 சதவீதம் உயர்ந்துள்ளது.
தேயிலை விலை 64 சதவீதம் உயர்ந்துள்ளது. அந்நாட்டின் அத்தியாவசிய உணவான கோதுமையின் விலை 57 சதவீதம் உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வால், நகர்ப்புறங்களில் பணவீக்க விகிதம் 21.6 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 28.8 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. அந்நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு வெகுவாக குறைந்துவிட்டதாகவும், தற்போதுஉள்ள கையிருப்பை வைத்து, மூன்று வாரங்கள் மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என்றும், பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 227 ஆக சரிந்துள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிஉள்ள பாகிஸ்தான் அரசை மீட்பதற்காக, சீனாவின் உதவியை அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நாடிஉள்ளார். சீன பிரதமர் லீ கிகுவாங் உடன் தொலைபேசி வாயிலாக உதவி கோரினார்.