எடப்பாடியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க முடியாது: தேர்தல் ஆணையம்

எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் வேட்புமனுவில் தாம் கையெழுத்திடுவதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை; ஆகையால் இடைக்கால பொதுச்செயலாளராக தம்மை அங்கீகரித்து அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று இபிஎஸ், உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதிமுகவின் பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த வழக்கில் இபிஎஸ், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் அங்கீகாரம் கோரியும் இரட்டை இலை சின்னம் கோரியும் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இது விசித்திரமான வழக்கு. இடையீட்டு மனு மீது பிறப்பிக்கப்படும் உத்தரவுக்கும் அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தது. அத்துடன் இபிஎஸ்-ன் இடைக்கால மனு மீது தேர்தல் ஆணையமும், ஓபிஎஸ் தரப்பும் பதில் மனுத் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனடிப்படையில் ஓபிஎஸ் தரப்பு, உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவைத் தாக்கல் செய்தது. அதில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை. அப்படி இருக்கும் போது அதிமுகவின் பிரதிநிதி என இபிஎஸ் உரிமை கோர முடியாது. இது அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பில் குறுக்கிடும் நடவடிக்கை என குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையமும் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க முடியாது. ஜூலை 11 அதிமுக பொதுக்குழு தீர்மான விவரங்களை இன்னமும் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விதமும் கேள்விக்குறியதாகும். ஆகையால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தம்மை அங்கீகரிக்க கோரும் எடப்பாடி பழனிசாமி மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதி வேட்புமனுத் தாக்கலின் போது இரட்டை இலை சின்னம் கேட்கப்பட்டால் அது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிதான் முடிவு செய்வார். ஒவ்வொரு கட்சியின் உட்கட்சி தேர்தல்களை எல்லாம் தேர்தல் ஆணையம் கண்காணித்துக் கொண்டிருக்கவும் முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் மனு, எடப்பாடி பழனிசாமிக்கு மிகப் பெரிய பின்னடைவாகும்.