டிஎன்பிஎஸ்சியின் அலட்சியமே குரூப் 2 தேர்வு குளறுபடிக்கு காரணம்: டிடிவி தினகரன்!

டிஎன்பிஎஸ்சியின் அலட்சியமே குரூப் 2 தேர்வு குளறுபடிக்கு காரணம் என்றும், இப்போதைய குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மை தேர்வை ரத்து செய்து விட்டு குளறுபடி இன்றி புதிய தேர்வு நடத்த வேண்டும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுக்கான முதன்மை தேர்வு நடைபெற்று வருகிறது. 5,446 பணியிடங்களுக்காக நடைபெறும் இந்தத் தேர்வுக்கு சுமார் 186 இடங்களில் இருக்கக்கூடிய 280 தேர்வு மையங்களில் 51,071 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 32 தேர்வு மையங்களில் 8,315 பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த நிலையில் சென்னையில் துரைப்பாக்கம், புதுக்கோட்டை, விழுப்புரம் உள்ளிட்ட சில தேர்வு மையங்களில் 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வு சில குளறுபடிகளால் தாமதமாக தொடங்கியது. வருகைப் பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாளில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக வினாத்தாள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. அது சரி செய்யப்பட்டு, தேர்வு அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட்டது. இந்த கால தாமதத்தை ஈடு செய்யும் வகையில் மதியம் நடைபெறும் 2ஆம் தாள் தேர்வு 2.30 மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில், தேர்வர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, திருப்பி வாங்கப்பட்டது, தேர்வு தொடங்க தாமதம் ஆகிய குழப்பங்களால் தேர்வர்கள் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளதால், இந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் முறையாக தேர்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:-

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளில் குளறுபடி என்ற செய்தி 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் தேர்வர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ பணிகளுக்கான முதன்மை தேர்வில் சென்னை, திருச்சி உள்ளிட்ட தேர்வு மையங்களில் பதிவெண் குளறுபடியால் தேர்வு தாமதமாக தொடங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. புதிதாக தேர்வு வையுங்கள் தேர்வுக்கான முன்னேற்பாடுகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அலட்சியமாக செயல்பட்டதே குளறுபடிக்கு காரணம் என தேர்வர்கள் கருதுகின்றனர். தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலை எனும் எதிர்காலம் பாதிக்கப்படாதவாறு இப்போதைய குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மை தேர்வை ரத்து செய்து விட்டு குளறுபடி இன்றி புதிய தேர்வு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.