modi

வெற்றிக்கான மூன்று காரணிகள் – மோடி

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு, பாஜகவின் மூன்று காரணிகள் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதைதொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகலாந்தில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த மூன்று மாநில தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.

அந்தவகையில் திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல் மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இம்மூன்று மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தோல்வியை தழுவியுள்ளன. இந்தநிலையில் வடகிழக்கு மாநிலங்களில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றதை தொடர்ந்து, வெற்றிக்காக உழைத்த பாஜகவினருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். மேலும் வடகிழக்கு சகோதர சகோதரிகளை மதிக்க” தங்கள் தொலைபேசிகளில் ஒளிரும் விளக்குகளை இயக்குமாறு பாஜக ஊழியர்களை வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து பாஜக தொண்டர்கள் தங்கள் செல்போனில் டார்ச்சை ஆன் செய்து தங்கள் நன்றியை தெரிவித்தனர்.

பாஜக தலைமையகத்தில் பிரதமர் உரையாற்றும்போது, ‘‘ வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி தொலைவே வடகிழக்கு மாநிலங்கள் இருந்தாலும், இதயத்திற்கு அருகில் தான் இருக்கிறது.

கடந்த ஆண்டுகளில், பாஜக இதுபோன்ற பல சந்தர்ப்பங்களைக் கண்டுள்ளது. இன்று அதுபோன்ற மற்றொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநில மக்கள் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு முழு ஆதரவை வழங்கியுள்ளனர்.

இன்றைய தேர்தல் முடிவுகள் நாட்டுக்கும் உலகத்துக்கும் ஒரு செய்தி. இந்தியாவில் மக்கள் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக விழுமியங்களை நம்புகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. இந்தியாவில் ஜனநாயகம் தழைத்தோங்குகிறது. ஒரு காலத்தில் வடகிழக்கில் தேர்தல் நடந்து முடிவுகள் வெளியாகும், ஆனால் அதிகம் விவாதிக்கப்படாது.

தேர்தல் வன்முறை மற்றும் முற்றுகை குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது. ஆனால் இம்முறை வடகிழக்கில் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டோம். புதிய சிந்தனையின் பிரதிபலிப்பாக இருக்கும் வடகிழக்கை நாங்கள் காண்கிறோம்.

பாஜகவின் வெற்றிக்கான காரணத்தை பல அரசியல் ஆய்வாளர்கள் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். நமது நலம் விரும்பிகள் சிலர் அதற்கான காரணத்தை அறிய விரும்புகிறார்கள். காரணம் ‘திரிவேணி’ அதாவது மூன்று முக்கிய காரணிகள். முதல் காரணம் பாஜக அரசாங்கத்தின் வேலை, இரண்டாவது பாஜகவின் வேலை பாணி, கடைசியாக பாஜகவின் காரியகர்த்தாக்கள்’’ என பிரதமர் தெரிவித்தார்.