புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும்: பிரதமர் மோடி!

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் விடியோவினைப் பகிர்ந்து, புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் விடியோவினைப் பகிர்ந்த அவர், மக்கள் அனைவரும் எனது நாடாளுமன்றம், எனது பெருமை என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் விடியோவினை தங்கள் குரல் பதிவோடு பகிருமாறும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

புதிய நாடாளுமன்ற கட்டடம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ள செய்யும். இந்த விடியோ புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சிறப்பான அமைப்பை காட்டும் விதமாக பகிரப்பட்டுள்ளது. நான் உங்களிடத்தில் ஒரு சிறப்பான வேண்டுகோளை முன்வைக்கிறேன். இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் விடியோவினை உங்களது சொந்த குரலில் உங்கள் எண்ணங்களை, கருத்துகளை பதிவு செய்து பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு நீங்கள் பகிரும் விடியோக்களில் சிலவற்றை நான் ரீ-டுவிட் செய்வேன். எனது நாடாளுமன்றம், எனது பெருமை என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்த மறந்துவிட வேண்டாம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

நாளை மறுநாள் (மே 28) புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.