சொத்து விவரங்களை மறைத்ததாக எடப்பாடி மீது வழக்கு: நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!

கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சொத்து விவரங்களை மறைத்ததாக கூறி எடப்பாடி பழனிசாமி மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதன் அறிக்கை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொத்து விபரங்களை மறைத்து காட்டியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் புகார் மீது முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த, சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் விசாரணை அறிக்கையை மே மாதம் 26 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் எடப்பாடி பழனிசாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கையை இன்று சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.