புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி திறந்துவைக்க கோரிய மனு தள்ளுபடி!

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

தலைநகர் டெல்லியில் சுமார் ரூ.850 கோடி மதிப்பில் பிரமாண்ட நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதற்கு கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். புதிய நாடாளுமன்ற கட்டிடப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதனையடுத்து இதனை பிரதமர் நரேந்திர மோடி வரும் 28ஆம் தேதி திறந்து வைக்கிறார். நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டின் முதல் குடிமகளான ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனை மத்திய அரசு ஏற்காத நிலையில், நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. ஆனால் ஜனநாயகத்தின் மையமாகத் திகழும் நாடாளுமன்ற திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும் என்று பாஜக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கிடையே நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் நேற்று பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. கன்னியாகுமரியைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் சுகின் என்பவர், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக் கோரி மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அரசியலமைப்பு சட்டம் 79-வது பிரிவில் நாடாளுமன்றம் என்பது ஜனாதிபதியையும் இரு அவைகளையும் கொண்டது என குறிப்பிடப்பட்டு உள்ளது. நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதியே நாடாளுமன்றத்தை கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் படைத்தவர். பிரதமரையும், அமைச்சர்களையும் நியமிப்பதுடன், மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் பெயரிலேயே எடுக்கப்படுகின்றன.

அப்படி இருக்கும்போது புதிய நாடாளுமன்றத்தை திறப்பதற்கு அவருக்கு அழைப்பு விடுக்காதது, ஜனாதிபதியின் மதிப்பை குறைப்பது மட்டுமின்றி அரசியலமைப்பு சட்டத்தையும் மீறுவதாக உள்ளது. இந்த விவகாரத்தில் மக்களவை செயலாளரின் அழைப்பிதழ் தன்னிச்சையானது. எனவே புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவை கொண்டு திறக்க மக்களவை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் தொடர்ந்த இந்த பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகேஸ்வரி, நரசிம்மா அடங்கிய அமர்வு முன்பு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், புதிய நாடாளுமன்ற திறப்பு விழா விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை எனத் தெரிவித்தனர். இந்த பொதுநல வழக்கை விசாரிக்க மாட்டோம் என்று நீதிபதிகள் கூறியதை அடுத்து மனுவை திரும்பப்பெற்றார் மனுதாரர் ஜெய சுகின். வழக்கு திரும்பப் பெறப்பட்டதால் புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறக்க தடையில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.