அபிஷேக் பானர்ஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி!

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முன் ஆஜராக தடை கோரும் அபிஷேக் பானர்ஜி மனுவை ஏற்க முடியாது. கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவு உறுதி செய்யப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்குவங்க மாநில கல்வித்துறை ஆட்சேர்ப்பு மோசடி வழக்கில் தொடர்புடைய திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், எம்பியுமான அபிஷேக் பானர்ஜி (முதல்வர் மம்தாவின் உறவினர்) மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இவ்வழக்கில் தம்மை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதிக்க கூடாது எனக்கூறி, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அபிஷேக் பானர்ஜி மனுதாக்கல் செய்தார். இம்மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், விசாரணை அமைப்புகள் முன்பு ஆஜராக உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அபிஷேக் பானர்ஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ரீகால் மனுவை தாக்கல் செய்தார்.
இம்மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால பெஞ்ச், ‘சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முன் ஆஜராக தடை கோரும் அபிஷேக் பானர்ஜி மனுவை ஏற்க முடியாது. கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. அதில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் பிறப்பித்த ரூ. 25 லட்சம் அபராதத்திற்கு மட்டும் இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் முன் அபிஷேக் பானர்ஜி ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.