சவூதியில் இருந்து சொந்த ஊர் திரும்பிய ராமேசுவரம் இளைஞர் வீட்டில் என்ஐஏ சோதனை!

சவூதியில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய ராமேசுவரம் இளைஞரின் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் (என்ஐஏ) நேற்று சோதனை நடத்தினர்.

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் செய்யது யூசுப் (30). இவர் 2 ஆண்டுகள் சவூதி அரேபியாவில் பணிபுரிந்து விட்டு 6 மாதங்களுக்கு முன்பு திரும்பினார். தற்போது தங்கச்சிமடத்தில் அரிசிக் கடை நடத்தி வருகிறார். சவூதி அரேபியாவில் வேலை பார்த்த 2 ஆண்டுகளில் இவருடைய வங்கிக் கணக்கில் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் நடந்ததாக என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை ஆய்வாளர் சரவணன் தலைமையில் தங்கச்சிமடத்தில் உள்ள செய்யது யூசுப் வீட்டில் சோதனையைத் தொடங்கினர். நேற்று காலை 10 மணி வரை சோதனை நடந்தது.

செய்யது யூசுப்புக்கும் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கும் தொடர்பு உள்ளதா எனவும் அவரது வங்கி கணக்கின் பணப் பரிவர்த்தனைகள் குறித்தும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் அவர் பயன்படுத்தி வந்த செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தேவைப்படும்பட்சத்தில் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.